ஸூரத்துத் தக்வீர்

(சுருட்டுதல்)
அத்தியாயம்-81 / மொத்த வசனம்-29


அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகின்றேன்)


81:1. சூரியன் (ஒளியில்லாததாகச்) சுருட்டப்படும் போது


81:2. நட்சத்திரங்கள் (ஒளியிழந்து) உதிர்ந்து விழும்போது-


81:3. மலைகள் பெயர்க்கப்படும் போது-


81:4. சூல் நிறைந்த ஒட்டகைகள் (கவனிப்பாரற்று) விடப்படும் போது-


81:5. காட்டு மிருகங்கள் (மனிதர்களுடனும், இதர பிராணிகளுடனும்) ஒன்று சேர்க்கப்படும்போது-


81:6. கடல்கள் தீ மூட்டப்படும்போது-


81:7. உயிர்கள் ஒன்றிணைக்கப்படும் போது-


81:8. உயிருடன் புதைக்கப்பட்ட பெண் (குழந்தை) வினவப்படும் போது-


81:9. ''எந்தக் குற்றத்திற்காக அது கொல்லப்பட்டது?"" என்று-


81:10. பட்டோலைகள் விரிக்கப்படும் போது-


81:11. வானம் அகற்றப்படும் போது-


81:12. நரகம் கொழுந்துவிட்டு எரியுமாறு செய்யப்படும் போது-


81:13. சுவர்க்கம் சமீபமாக கொண்டு வரப்படும்போது-


81:14. ஒவ்வோர் ஆத்மாவும், தான் கொண்டு வந்ததை அறிந்து கொள்ளும்.


81:15. எனவே, பின்னே விலகிச் செல்பவை (கிரகங்களின்) மீது சத்தியமாக-


81:16. முன் சென்று கொண்டிருப்பவை மறைபவை (மீதும்),


81:17. பின்வாங்கிச் செல்லும் இரவின் மீதும்,


81:18. மூச்சுவிட்டுக் கொண்டெழும் வைகறையின் மீதும் சத்தியமாக.


81:19. நிச்சயமாக (இக்குர்ஆன்) மிகவும் கண்ணியமிக்க ஒரு தூதுவர் (ஜிப்ரயீல் மூலம் வந்த) சொல்லாகும்.


81:20. (அவர்) சக்திமிக்கவர்; அர்ஷுக்குடையவனிடம் பெரும் பதவியுடையவர்.


81:21. (வானவர் தம்) தலைவர்; அன்றியும் நம்பிக்கைக்குரியவர்.


81:22. மேலும் உங்கள் தோழர் பைத்தியக்காரர் அல்லர்.


81:23. அவர் திட்டமாக அவரை (ஜிப்ரயீலை) தெளிவான அடிவானத்தில் கண்டார்.


81:24. மேலும், அவர் மறைவான செய்திகளை கூறுவதில் உலோபித்தனம் செய்பவரல்லர்.


81:25. அன்றியும், இது விரட்டப்பட்ட ஷைத்தானின் வாக்கல்ல.


81:26. எனவே, (நேர்வழியை விட்டும்) நீங்கள் எங்கே செல்கின்றீர்கள்?


81:27. இது, அகிலத்தாருக்கெல்லாம் உபதேசமாகும்.


81:28. உங்களில் நின்றும் யார் நேர்வழியை விரும்புகிறாரோ, அவருக்கு (நல்லுபதேசமாகும்).


81:29. ஆயினும், அகிலங்களுக்கெல்லாம் இறைவனாகிய அல்லாஹ் நாடினாலன்றி நீங்கள் (நல்லுபதேசம் பெற) நாடமாட்டீர்கள்.