ஸூரத்துல் காஷியா

(மூடிக் கொள்ளுதல்)
அத்தியாயம்-88 / மொத்த வசனம்-26


அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகின்றேன்)


88:1. சூழந்து மூடிக்கொள்வதின் (கியாம நாளின்) செய்தி உமக்கு வந்ததா?


88:2. அந்நாளில் சில முகங்கள் இழிவுபட்டிருக்கும்.


88:3. அவை (தவறான காரியங்களை நல்லவை என கருதி) செயல்பட்டவையும் (அதிலேயே) உறுதியாக நின்றவையுமாகும்.


88:4. கொழுந்து விட்டெறியும் நெருப்பில் அவை புகும்.


88:5. கொதிக்கும் ஊற்றிலிருந்து, (அவர்களுக்கு) நீர் புகட்டப்படும்.


88:6. அவர்களுக்கு விஷச் செடிகளைத் தவிர, வேறு உணவில்லை.


88:7. அது அவர்களைக் கொழு(த்துச் செழி)க்கவும் வைக்காது, அன்றியும் பசியையும் தணிக்காது.


88:8. அந்நாளில் சில முகங்கள் செழுமையாக இருக்கும்.


88:9. தம் முயற்சி (நற்பயன் அடைந்தது) பற்றி திருப்தியுடன் இருக்கும்.


88:10. உன்னதமான சுவர்க்கச் சோலையில்-


88:11. அதில் யாதொரு பயனற்ற சொல்லையும் அவை செவியுறுவதில்லை.


88:12. அதில் ஓடிக் கொண்டிருக்கும் நீரூற்று உண்டு.


88:13. அதில் உயர்ந்த ஆசனங்கள் உண்டு.


88:14. (அருந்தக்) குவளைகளும் வைக்கப் பட்டிருக்கும்.


88:15. மேலும், அணி அணியாக்கப்பட்டுள்ள திண்டுகளும்-


88:16. விரிக்கப்பட்ட உயர்ந்த கம்பளங்களும் உண்டு.


88:17. (நபியே!) ஒட்டகத்தை அவர்கள் கவனிக்க வேண்டாமா? அது எவ்வாறு படைக்கப்பட்டிருக்கிறது என்று-


88:18. மேலும் வானத்தை அது எவ்வாறு உயர்த்தப்பட்டிருக்கிறது? என்றும்,


88:19. இன்னும் மலைகளையும் அவை எப்படி நாட்டப்பட்டிருக்கின்றன? என்றும்,


88:20. இன்னும் பூமி அது எப்படி விரிக்கப்பட்டிருக்கிறது? (என்றும் அவர்கள் கவனிக்க வேண்டாமா?)


88:21. ஆகவே, (நபியே! இவற்றைக் கொண்டு) நீர் நல்லுபதேசம் செய்வீராக, நிச்சயமாக நீர் நல்லுபதேசம் செய்பவர் தாம்.


88:22. அவர்கள் மீது பொறுப்புச் சாட்டப்பட்டவர் அல்லர்.


88:23. ஆயினும், எவன் (சத்தியத்தைப்) புறக்கணித்து, மேலும் நிராகரிக்கின்றானோ-


88:24. அவனை அல்லாஹ் மிகப் பெரும் வேதனையைக் கொண்டு வேதனைப்படுத்துவான்.


88:25. நிச்சயமாக, நம்மிடமே அவர்களுடைய மீளுதல் இருக்கிறது.


88:26. பின்னர், நிச்சயமாக நம்மிடமே அவர்களைக் கேள்வி கணக்கு கேட்பதும் இருக்கிறது.