ஸூரத்துல் ஃபஜ்ரி

(விடியற்காலை)
அத்தியாயம்-89 / மொத்த வசனம்-30


அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகின்றேன்)


89:1. விடியற் காலையின் மீது சத்தியமாக,


89:2. பத்து இரவுகளின் மீது சத்தியமாக,


89:3. இரட்டையின் மீதும், ஒற்றையின் மீதும் சத்தியமாக,


89:4. செல்கின்ற இரவின் மீதும், சத்தியமாக,


89:5. இதில் அறிவுடையோருக்கு (போதுமான) சத்தியம் இருக்கிறதல்லவா?


89:6. உம்முடைய இறைவன் ஆ(து கூட்டத்)தை என்ன செய்தான் என்பதை நீர் பார்க்கவில்லையா?


89:7. (அவர்கள்) தூண்களையுடைய 'இரம்" (நகர) வாசிகள்,


89:8. அவர்கள் போன்ற ஒரு சமுதாயம் எந்த நாடுகளிலும் படைக்கப்படவில்லை.


89:9. பள்ளத்தாக்குகளில் பாறைகளைக் குடைந்(து வசித்து வந்)த ஸமூது கூட்டத்தையும் (என்ன செய்தான் என்று பார்க்கவில்லையா?)


89:10. மேலும், பெரும் படைகளைக் கொண்ட ஃபிர்அவ்னையும் (உம் இறைவன் என்ன செய்தான் என்பதை நீர் பார்க்கவில்லையா?)


89:11. அவர்களெல்லாம் நாடுகளில் வரம்பு மீறி நடந்தனர்.


89:12. அன்றியும், அவற்றில் குழப்பத்தை அதிகப்படுத்தினர்.


89:13. எனவே, உம்முடைய இறைவன் அவர்கள் மேல் வேதனையின் சாட்டையை எறிந்தான்.


89:14. நிச்சயமாக, உம்முடைய இறைவன் கண்காணித்துக் கொண்டு இருக்கிறன்றான்.


89:15. ஆனால், இறைவன் மனிதனுக்கு கண்ணிப்படுத்தி, பாக்கியம் அளித்து அவனைச் சோதிக்கும் போது அவன்; ''என் இறைவன் என்னை கண்ணியப்படுத்தியுள்ளான்"" என்று கூறுகிறான்.


89:16. எனினும் அவனுடைய உணவு வசதிகளைக் குறைத்து, அவனை (இறைவன்) சோதித்தாலோ, அவன், ''என் இறைவன் என்னைச் சிறுமைப் படுத்தி விட்டான்"" எனக் கூறுகின்றான்.


89:17. அப்படியல்ல! நீங்கள் அநாதையைக் கண்ணியப்படுத்துவது இல்லை.


89:18. ஏழைக்கு உணவளிக்குமாறு தூண்டுவதில்லை.


89:19. இன்னும் (பிறருடைய) அநந்தரச் சொத்துக்களையும் (சேர்த்து) உண்டு வருகின்றீர்கள்.


89:20. இன்னும், பொருளை அளவு கடந்து பிரியத்துடன் நேசிக்கின்றீர்கள்.


89:21. அப்படியல்ல! பூமி தூள் தூளாகத் தகர்க்கப்படும் போது,


89:22. உம்முடைய இறைவனும், வானவரும் அணியணியாக வரும்போது,


89:23. அந்நாளில் நரகம் முன் கொண்டு வரப்படும் போது - அந்நாளில் மனிதன் உணர்வு பெறுவான்; அந்த (நாளில்) உணர்வு (பெறுவதினால்) அவனுக்கு என்ன பலன்.


89:24. ''என் (மறுமை) வாழ்க்கைக்காக நன்மையை நான் முற்படுத்தி (அனுப்பி)யிருக்க வேண்டுமே!"" என்று அப்போது மனிதன் கூறுவான்.


89:25. ஆனால் அந்நாளில் (அல்லாஹ் செய்யும்) வேதனையைப் போல், வேறு எவனும் வேதனை செய்யமாட்டான்.


89:26. மேலும், அவன் கட்டுவது போல் வேறு எவனும் கட்டமாட்டான்.


89:27. (ஆனால், அந்நாளில் நல்லடியார்களிடம்) சாந்தியடைந்த ஆத்மாவே!


89:28. நீ உன்னுடைய இறைவன்பால் திருப்தி அடைந்த நிலையிலும், (அவன்) உன்மீது திருப்தியடைந்த நிலையிலும் மீளுவாயாக.


89:29. நீ என் நல்லடியார்களில் சேர்ந்து கொள்வாயாக.


89:30. மேலும், நீ என் சுவர்க்கத்தில் பிரவேசிப்பாயாக (என்று இறைவன் கூறுவான்).