ஸூரத்துஷ் ஷம்ஸ்

(சூரியன்)
அத்தியாயம்-91 / மொத்த வசனம்-15


அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகின்றேன்)


91:1. சூரியன் மீதும், அதன் பிரகாசத்தின் மீதும் சத்தியமாக


91:2. (பின்) அதனைத் தொடர்ந்து வரும் சந்திரன் மீதும் சத்தியமாக-


91:3. (சூரியனால்) பகல் வெளியாகும்போது, அதன் மீதும் சத்தியமாக-


91:4. (அப்பகலை) மூடிக்கொள்ளும் இரவின் மீதும் சத்தியமாக-


91:5. வானத்தின் மீதும், அதை(ஒழுங்குற) அமைந்திருப்பதின் மீதும் சத்தியமாக-


91:6. பூமியின் மீதும், இன்னும் அதை விரித்ததின் மீதும் சத்தியமாக-


91:7. ஆத்மாவின் மீதும், அதை ஒழுங்குபடுத்தியவன் மீதும் சத்தியமாக-


91:8. அப்பால், அவன் (அல்லாஹ்) அதற்கு அதன் தீமையையும், அதன் நன்மையையும் உணர்த்தினான்.


91:9. அதை (ஆத்மாவை)ப் பரிசுத்தமாக்கியவர் திடமாக வெற்றியடைந்தோர்.


91:10. ஆனால் எவன் அதை(ப் பாவத்தில்) புகுத்தினானோ அவன் திட்டமாகத் தோல்வி அடைந்தான்.


91:11. 'ஸமூது" (கூட்டத்தினர்) தங்கள் அக்கிரமத்தினால் (ஸாலிஹ் நபியைப்) பொய்ப்பித்தனர்.


91:12. அவர்களில் கேடுகெட்ட ஒருவன் விரைந்து முன் வந்தபோது,


91:13. அல்லாஹ்வின் தூதர் (ஸாலிஹ்) அவர்களை நோக்கி: ''இப் பெண் ஒட்டகம் அல்லாஹ்வுடையது, இது தண்ணீர் அருந்த(த் தடை செய்யாது) விட்டு விடுங்கள்"" என்று கூறினார்.


91:14. ஆனால், அவர்கள் அவரைப் பொய்ப்பித்து, அதன் கால் நரம்பைத் தறித்து விட்டனர் - ஆகவே, அவர்களின் இந்தப் பாவத்தின் காரணமாக அவர்களுடைய இறைவன் அவர்கள் மீது வேதனையை இறக்கி, அவர்கள் யாவரையும் (அழித்துச்) சரியாக்கி விட்டான்.


91:15. அதன் முடிவைப் பற்றி அவன் பயப்படவில்லை.